புதினா புலாவ்
வீட்டில் விருந்தினர் வருகையின் போதும், விசேஷ தினங்களின் போதும் வித்தியாசமான முறையில் சுவைமிகுந்த புதினா புலாவ் செய்யலாம். விருந்தினரை சிறப்பிக்கும் முறையில் அதே சமயம் இயற்கை சார்ந்த ஆரோக்கியமான உணவாக இது அமையும்.
புதினா புலாவ் செய்யத் தேவையான பொருள்:
- 400 கிராம் பாசுமதி அரிசி
- 2"(இன்ச்) இஞ்சி
- 6 பூண்டு பல்
- 3 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- நெய் சிறிதளவு
- 5 ஏலக்காய்
- 6 கிராம்பு
- 2 துண்டு பட்டை
- சிறிய அளவு ஜாதிப்பூ
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 2 ப்ரிஞ்சி இலை
- 2 பெரிய வெங்காயம்
- காரத்திற்குத் தகுந்த மிளகு தூள்
- 1 கப் புதினா இலை
- 1/2 கப் கொத்தமல்லி இலை
- 2 உருளைக்கிழங்கு
- 1/2 கப் பச்சை பட்டாணி
- உப்பு தேவையான அளவு
- 1/2 எலுமிச்சம்பழம்
செய்முறை: முதலில் அரிசியை நன்றாக சுத்தம் செய்து, பிறகு நீர் ஊற்றி ஊற விட வேண்டும். பிறகு 1 கப் புதினா, 1/2 கப் கொத்தமல்லி இலை, 2" (இன்ச்) இஞ்சி தோல் சீவியது, 6 பூண்டுப் பல் தோல் உரித்தது, 3 பச்சை மிளகாய் என அனைத்தையும் சுத்தம் செய்து எடுத்து கொள்ளவேண்டும். பிறகு அதை நன்றாக மைபோல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சமைக்கும் பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சிறிதளவு ஊற்றி சூடேற்றவும். மிதமாக சூடு ஏறியவுடன் அதில் தட்டிய ஏலக்காய் ஐந்து, ஆறு கிராம்பு, 2 துண்டு பட்டை, ஒரு சிறிய ஜாதிப்பூ, ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் சீரகம், 2 ப்ரிஞ்சி இலை அனைத்தையும் போட்டு வதக்கவும்.
நன்றாக நறுமணம் வரும்வரை வதக்கிய பிறகு அதில் இரண்டு பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி போடவும் அதோடு காரத்திற்கு தகுந்த மிளகுத்தூள் சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அரைத்த புதினா-கொத்தமல்லி கலவையை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும், இஞ்சி-பூண்டு இரண்டிலும் பச்சை வாசம் போகும் வரை நன்றாக கிளறவும், அதேசமயம் புதினா நிறம் மாறக்கூடாது. பிறகு அதில் நறுக்கிய 2 உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து கிளறி விடவேண்டும்.
உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி அரை வேக்காட்டுக்கு வந்த பிறகு அதில் அரிசியை அளந்து எடுத்த கப்பில் 3 கப் நீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நல்ல கொதிநிலையில் அரை எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து அதோடு ஊற வைத்த அரிசியை போட்டு வேகவிட வேண்டும் பாத்திரத்தில் ஊற்றிய நீர் அரிசியின் மட்டத்திற்கு ஒரு இன்ச் மேல் வரும் வரை சுண்ட விட வேண்டும். சரியான அளவில் நீர் சுண்டிய பிறகு 20 நிமிடம் மிதமான சூட்டில் தம்மில் வைத்தால் புதினா புலாவ் தயார்.

0 Comments